அரசியல் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்: கமல்ஹாசன்
அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சென்னை: தன்னால் வெறும் கலைஞனாக மட்டுமே இருக்க முடியாது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். மேலும் சமீபத்திய அரசியல் நிலைமை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
தமிழன் என்று கூறுவதை விட திராவிடன் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று கூறிய கமல், திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவரது கருத்து என்று தெரிவித்தார்.
முதல்தகுதி
எளிமையான தலைவர்கள் தேவைப்படுவதாகக் கூறிய அவர், அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
சட்டங்கள் மாறவேண்டும்
காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும் என்று கூறிய கமல், மக்களின் தேவைகளுக்கிணங்க சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். சாதியை எடுத்துவிடுவதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்றும் கமல் தெரிவித்தார்.
அரசியல் ஹீரோக்கள்
மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது; காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி , பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை என்று கூறினார் .
அரசியல் மாறுபடும்
கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும் . மக்களுக்கு தேவையான அரசியலே தேவை . அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெடுத்தன என்றார். திமுக சாதாரணமாக தொடங்கி ஆட்சியமைக்கும் அளவிற்கு மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது என்றும் கமல் தெரிவித்தார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
தனக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் என யாருடனும் பரிட்சையமில்லை என்று கூறிய கமல் தான் யாருக்காக ஆதரவாகவும் குரல் கொடுக்கவில்லை என்றார். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறிய அவர், சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல தான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்வதாக கூறினார். அதற்காக தன்னை அரசியலுக்கு வரச்சொல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
திராவிடம் அழியாது
திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவருடைய கருத்து என்று தெரிவித்த கமல், திராவிட இயக்கங்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்று கூறினார். திராவிடத்திற்கு ஆதரவாக தான் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.