நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா ஆவேசம்
அம்மா இல்லாத இந்த நேரத்தில் அம்மா வகுத்த பாதையில் இருந்து விலகி விட முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எச்சரிக்கைவிடுத்தார்.
சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏக்கள் மத்தியில் சசிகலா இன்று பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தைதான் முதல்வர் பதவியில் அமருமாறு கூறினேன். அப்போது பன்னீர்செல்வம் உட்பட பலரும் என்னைதான் முதல்வராக வற்புறுத்தினர். நான் அப்போது எந்த பதவியையும் ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதால், ஏற்க மறுத்தேன்.
அதிமுக அன்று பிளவுபட்ட நிலையில் (ஜே அணி-ஜா அணி) மாற்று அணியில் இருந்து பன்னீர்செல்வம் செய்த செயல்களை கருணை உள்ளத்தோடு மன்னித்துதான் அம்மா அவருக்கு வாய்ப்பு வழங்கினார். பல முறை அந்த வாய்ப்பை பெற்றார். அந்த வழியில்தான் நானும் செயல்பட்டேன். ஆனால் அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள், சட்டசபையில் அம்மாவை அழிக்க நினைத்த திமுகவினரிடம், கழகத்திற்கு நாசம் விளைவித்த திமுகவினரும் இணைந்து அவர் செய்த செயல்கள், அம்மா எதற்காக போராடினார்களோ, கடைக்கோடி தொண்டர்கள் எதற்காக போராடினார்களோ அதை ஈடேற்றும் வகையில் இல்லை.
அம்மா இல்லாத இந்த நேரத்தில் அம்மா வகுத்த பாதையில் இருந்து விலகி விட முடியாது. இங்கு முதல்வர் என்ற சொல்லை காட்டிலும் அம்மா என்ற சொல்லுக்கு மதிப்பு அதிகம். அம்மா கனவுதான் நமது பாதை. அம்மா வழியில்தான் நமது பாதை. அவர் காட்டிய பாதையில்தான் நமது பயணம் என்று ஏற்கனவே சொன்னேன். இதை தாண்டி யார் நடித்தாலும் தடையை, நடையை, நடிப்பை அதிமுக கண்டுபிடித்துவிடும். இவ்வாறு சசிகலா பேசினார்.
இத்தனை நாட்கள் வராத எதிர்ப்பு இப்போது நமது எதிரிகளிடமிருந்து வருகிறது என்றால் என்ன அர்த்தம். எதிரிகளுக்கு பிடிக்காத விஷயம் இங்கு நடக்கிறது என்று அர்த்தம். இதற்கு அதிமுகவும் அஞ்சாது. நானும் அஞ்சமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.