23 ஆண்டுகளில் 23 முறை பணியிடம் மாற்றப்பட்டது எனது நேர்மைக்கு கிடைத்த பரிசு: சகாயம் பேச்சு
திருமங்கலம்: என்னுடைய 23 ஆண்டுகால பணிக் காலத்தில் 23 முறை பணியிடம் மாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் நான் சோர்வடைந்தது இல்லை. இது எனது நேர்மைக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மரக் கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த சகாயம் ஐ.ஏ.எஸ். பேசுகையில், புவி வெப்பமாயலை தடுக்கும் வகையில் மாணவர்கள் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட வேண்டும்.
தமிழ் மொழியை இன்றைக்கும் வளர்த்துக்கொண்டிருப்பது அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் தீவிரமாக தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும்.
என்னுடைய 23 ஆண்டுகால பணிக்காலத்தில் 23 முறை பணியிடம் மாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் நான் சோர்வடைந்தது இல்லை. இது எனது நேர்மைக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன் என்றார்.
சமீபத்தில் இலக்கு என்ற அமைப்பு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் பேரணியை நடத்தியது. திருச்சியைச் சேர்ந்த இலக்கு அமைப்பானது சகாயம் முதல்வராக வேண்டும் என்று கோருவோர் சென்னையில் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சகாயம் களம் இறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என இளைஞர்கள் விரும்புவது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு வருவது குறித்து இனி முடிவு எடுக்க வேண்டியது சகாயம் தான் என்று வைகோ கூறியுள்ளார். தொடர்ந்து சகாயத்துக்கு இளைஞர்கள் ஆதரவு பெருகி வரும் நிலையில் சகாயம் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.