நாடு நலம் பெற தமிழகத்தை தியாகம் செய்யலாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி இல.கணேசன் கருத்து
நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும் என பாஜக எம்.பி.,இல கணேசன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும்.
மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய அளவிலோ எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. எதிர்க்கட்சி என்றால் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது விதியும் அல்ல.
நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது. ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர்.
இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயத்திற்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது எனக் கூறினார்.
மேலும் நிலக்கரி, பெட்ரோல், ஹைட்ரோ கார்பன், இரும்பு தாது போன்றவை ஒரு மாநிலத்தின் இயற்கை வளமாகும். இவற்றை பயன்படுத்தும்போதுதான் அந்த மாநிலத்தின் தொழில்வளம் பெருகும், பொருளாதார வளர்ச்சி உயரும் என இல. கணேசன் குறிப்பிட்டார்.