இதோ இந்தக் கப்பலில்தான் அதிமுக இணைப்பு குறித்து பேச்சு நடக்கிறது...!
சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் தான் அதிமுக இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை: துறைமுகத்துக்கு வந்துள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலில் தான் அதிமுக இணைப்பு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இரு அணி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிநவீன வசதிகள் கொண்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கடந்த 15ஆம் தேதி சென்னை துறைமுகம் வந்தது. கடற்படை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கப்பலை வரவேற்றனர். இந்திய கடற்படையில் ஏற்கனவே, ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் மைசூர் என்ற பெயரில் மூன்று போர் கப்பல்கள் உள்ளன.
அந்த வரிசையில் 'ஐஎன்எஸ் சென்னை' போர் கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கப்பலின் சின்னத்தில் நீலநிறக்கடலும், பின்னணியில் வரலாற்று சிறப்புமிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரியத்தை குறிக்கும் கப்பல்
இதுதவிர, தமிழகத்தின் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் மஞ்சம்பட்டி காளை சின்னம் பொறித்த லோகோவும் உள்ளது. இந்த கப்பல் மும்பை கடல் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.
15ஆம் தேதி சென்னை வந்தது
முதல் முறையாக ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் 15ஆம் தேதி காலை சென்னை வந்தது. தமிழக தலைநகரின் பெயரை கொண்ட இந்த கப்பலை அர்ப்பணிக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் போர்க்கப்பலில் பயணம்
இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில நொடிக்கு நொடி பரபரப்பு நிலவி வரும் நிலையில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் இன்றுக் காலை குடும்பத்துடன் போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர்
நடுக்கடலில் பேச்சு வார்த்தை
அப்போது சசிகலா தரப்பால் அமைக்கப்பட்ட குழுவும் ஓபிஎஸ் அணியினரும் இணைவது குறித்து கப்பலில் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதகா தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே அதிமுக தொடர்பான பேச்சுவார்த்தை கப்பலில் நடுக்கடலில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.
புதுமையான அனுபவம்
இருப்பினும் கப்பலில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இதனிடையே போர்க்கப்பலில் குடும்பத்துடன் பயணிப்பது புதுமையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம் என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் மாற்றம்
முதல்முறையாக சென்னை வந்துள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல்லில் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. சென்னை வந்துள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் மூலம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை...