ஜெ.ரூமுக்குள் மட்டும் ஏன் வருமான வரி அதிகாரிகள் போகலை??
வேதா நிலையத்தில் ஜெயலலிதா அறைக்குள் சோதனை நடைபெறவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் ஜெயலலிதா அறையைத் தவிர மற்ற அறைகள் அனைத்திலும் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை கலக்கி வரும் நவம்பர் ரெய்டு சசிகலா குடும்பத்தை சுழன்றடித்த போது அதனை மக்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இவர்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது, சட்டப்படி சேர்த்த சொத்தாக இருந்தால் அதற்கான ஆவணங்களை காட்ட வேண்டியது கடமை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடந்த வருமான வரி அதிகாரிகளின் சோதனை கட்சித் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டே தான் இந்த சோதனையை நடத்துகிறதோ என்ற எண்ணம் கட்சியின் அடிமட்ட தொண்டருக்கும் வந்துவிட்டது.
ஜெ.வின் போயஸ் கார்டன்
போயஸ் கார்டனில் வேதா இல்லத்திற்கு அருகில் உள்ள ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன அறையை முதலில் சோதனையிட்ட வருமான வரி அதிகாரிகள் பின்னர் சசிகலா அறைக்கு சென்றுள்ளனர். உதவியாளராக இருக்கும் பூங்குன்றனுக்கு சுமார் ரூ. 300 கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக கடந்த வாரம் நடந்த சோதனையில் உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.
ஆவணங்களைத் தேடி
இதன் அடிப்படையிலேயே பூங்குன்றன் அறையில் வேறு ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என்று அதிகாரிகள் தேடிச் சென்றுள்ளனர். பூங்குன்றன் அறையைத் தொடர்ந்து சசிகலாவின் அறைக்கும் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
ஜெ. அறைக்கு நோ
மேலும் வருமான வரி அதிகாரிகள் ஜெயலலிதாவின் அறையையும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளதாக இளவரசியின் மகன் விவேக் கூறியுள்ளார். ஆனால் இதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை, ஜெயலலிதாவின் அறையை சோதனையிடக் கூடாது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அறையைத் தொடவில்லை
இதனால் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அறையைத் தவிர்த்து அனைத்து அறைகளையும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களின் பூதக்கண்ணாடி மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறையினரும் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.