திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கல்லூரியில் சோதனை... மாணவிகள் பெரும் அவதி!
திவாகரனுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் காலையில் இருந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
Recommended Video

மன்னார்குடி: திவாகரனுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் காலையில் இருந்து வருமானவரித்துறை சோதனை நடத்து கொண்டு இருக்கிறது. இதனால் அந்த கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுக்க மொத்தம் 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.

காலை 7.30 மணிக்கு சரியாக திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். சுந்தரக்கோட்டையில் இருக்கும் செங்கமல தாயார் பெண்கள் கல்லூரியில் இன்னும் சோதனை நடைபெறுகிறது. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நிறைய பெண்கள் அங்கு படித்து வருகின்றனர். மேலும் தொலைதூரத்தில் இருந்து அந்த கல்லூரியில் சேர்ந்து இருக்கும் பெண்கள் அந்த கல்லூரி விடுதியில் தங்கி இருக்கின்றனர்.
இந்தநிலையில் அந்த கல்லூரியில் நடக்கும் சோதனை காரணமாக அங்கு ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். யாரும் வெளியேயும் உள்ளேயேயும் செல்ல அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
மேலும் காலையில் இருந்து அந்த கல்லூரி பேருந்துகள் எதுவும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள் கல்லூரிக்குள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பைக்குகளிலும், காரிலும் வரும் மாணவிகள் கல்லூரிக்கு வெளியே காத்துக் கொண்டு இருக்கின்றனர். கல்லூரிக்கு விடுமுறை விடப்படுவது குறித்து முறையான தகவல்கள் வெளியாகவில்லை.
அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் அன்பு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் அந்த கல்லூரி உரிமையாளர் திவாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் சிலரும் அந்த கல்லூரியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications