ரெய்டு: ஆளும் அதிமுக அரசுக்கு மத்திய அரசு மிரட்டல்- அரசியல் சூழ்ச்சி- அதிமுக கொந்தளிப்பு
ராமமோகன் ராவ் வீடு மற்றும் தலைமை அலுவலகத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருவதற்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசிற்கு அழுத்தம் தருவதற்காக மத்திய அரசு செய்யும் சூழ்ச்சியே தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர் என்று அதிமுக மூத்த தலைவர்களான தீரன் மற்றும் ஆவடிக் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என 13 இடங்களில் இன்று காலை 6 மணியில் இருந்து வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள ராமமோகன் ராவின் அலுவலக அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கு அதிமுகவின் மூத்த தலைவர் தீரன் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். திடீரென நடத்தப்பட்ட இந்த வருமான வரிசோதனைக்கு அரசியல் சூழ்ச்சியே காரணம். தமிழக அரசு மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தீரன் கூறியுள்ளார். மேலும் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதிமுகவுக்கு இதன் மூலம் மத்திய அரசு மிரட்டல் கொடுத்து வருகிறது என்றும் தீரன் கூறினார்.
இதேப் போன்று, கறுப்புப் பணத்தை அழிக்கிறோம் என்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த மத்திய அரசு, தற்போது மாநிலத்தை அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது. தமிழக அரசியலில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தவே வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று ஆவடி குமார் கருத்து தெரிவித்துள்ளார்.