போங்க போங்க வரிசையில வந்து மனு தாக்கல் செய்யுங்க... விஷாலை விரட்டிய சுயேச்சைகள்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்ய நடிகர் விஷால் வரிசையில் தான் வரவேண்டும் என்று சுயேச்சைகள் கேட்டுக் கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய நடிகர் விஷாலை வரிசையில் தான் வரவேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர்கள் கோரியுள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் விஷால். விஷாலின் இந்த திடீர் அறிவிப்பு திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகளை அதிர்ச்சியானதாக இருந்தது.
ஏற்கனவே ஆர்கே நகரில் திமுக, அதிமுக, பாஜக, தினகரன், நாம் தமிழர் கட்சி, தீபா என்று 6 முனைப் போட்டி நிலவுகிறது. இது மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
விஷால் தலைவர்கள் சிலைக்கு மாலை
இன்று காலையில் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஷால் தொடர்ந்து சிவாஜி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை விஷால் மாலை அணிவித்தார்.
சுயேச்சை வேட்பாளர்கள் முறையீடு
சுயேச்சையாக போட்டியிடும் தாங்கள் காலையில் இருந்து வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறோம். ஆனால் நடிகர் விஷால் விஐபி அந்தஸ்த்துடன் இருப்பதால் வந்த உடனே மனுத்தாக்கல் செய்யச் செல்வதை ஏற்க முடியாது என்று சுயேச்சை வேட்பாளர்கள் முறையிட்டுள்ளனர்.
வரிசையில் தான் வரவேண்டும்
நடிகர் விஷால் மட்டுமல்ல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா இன்று தான் வேட்பு மனு தாக்கலுக்கு வருகிறார். அவரும் இதே மாதிரித் தான் வரிசையில் நின்று மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.
42 சுயேச்சைகள் காத்திருப்பு
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றோடு முடிகிறது. இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கலுக்காக 42 சுயேச்சை வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.