இந்தியாவின் வளர்ச்சியை விட ஜெ. ஆட்சியில் தமிழக வளர்ச்சி விகிதம் அதிகம்: அமைச்சர் தங்கமணி
சென்னை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியைவிட தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதாகத் தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி பேசினார்
இறக்குமதி அளவு குறைந்து ஏற்றுமதி அளவு அதிகரித்தால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்தியாவின் பொருளாதாரம் இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு கடந்த கால மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். அதில் திமுகவின் பங்கும் உண்டு.
ஸ்டாலின் ஒப்புதல்
ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசில் பங்குபெற்றுள்ள திமுகவும் பெரும் பங்காற்றி உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியானால் வீழ்ச்சிக்கும் திமுகதான் காரணம் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அன்னிய நேரடி முதலீடு
தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை ஈர்த்து தொழில்கள் பெருக வேண்டுமென்பதற்காக முதல்வர் ஜெயலலிதா, முதன்முதலாக பன்னாட்டு கம்பெனிகளான ஃபோர்டு, ஹூண்டாய், செயின்ட் கோபைன் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கிட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் வரலாற்றில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.31 ஆயிரத்து 706 கோடி அளவிற்கான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 68 திட்டங்களில் தமிழகத்தில் ஈர்த்த மொத்த முதலீடு ரூ.46 ஆயிரத்து 603 கோடியாகும். கிட்டத்தட்ட 1,62,667 பேருக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி
2013-2014-ஆம் ஆண்டில், மத்திய திட்டக்குழு அண்மையில் உற்பத்தித் துறையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பற்றிய அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சி விகிதம் 6.13 சதவீதம். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.74 சதவீதம் ஆகும்.
இரண்டாவது மாநிலம்
2013-2014-இல் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டிபி (நிலையான விலையில்) ரூ.4,78,975 கோடி பெற்று இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது.
இதுவே, திமுக அரசின் 2009-2010-ஆம் ஆண்டில் ரூ.3,56,632 கோடி பெற்று இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் வளர்ச்சி விகிதம்
2013-2014-ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை பொருத்தவரையில், இந்திய வளர்ச்சியை விட தமிழகம் நன்றாக உள்ளது. அதாவது வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு 8.93 சதவீதம் (இந்தியா சராசரி 0.91 சதவீதம்), உற்பத்தித் துறையில் தமிழ்நாடு 3.53 சதவீதம் (இந்தியா சராசரி -0.71 சதவீதம்), சேவைத் துறையில் தமிழ்நாடு 8.26 சதவீதம் (இந்தியா சராசரி 7.0 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.
வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை
பேரவையில் தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் பேசும்போது, வெளிமாநிலத்தினர் அதிகமாக தமிழகத்தில் வேலை செய்வதாகவும், ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் உண்மைக்கு மாறான செய்தியை சொன்னார்.
90 சதவிகித தமிழர்கள்
தமிழகத்தில் உள்ள ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற பெரிய கம்பெனிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 90 சதவீதமும், மற்ற மாநிலத்தினர் 10 சதவீதமும் தான் பணிபுரிகின்றனர்.
சிப்காட் வளாகத்தில் 2,235 தொழில் நிறுவனங்கள் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி முதலீட்டில், 5,97,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளன.
அதிலும், 84 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், மற்ற மாநிலத்தினர் 16 சதவீதமும் பணியாற்றி வருகின்றனர் என்றார் அமைச்சர் தங்கமணி.
கடனுதவி
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், 31.03.2014 வரையில் 1,15,806 நிறுவனங்களுக்கு ரூ.11,621.71 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இக்கழகம் அளித்துவரும் நிதியுதவியில் சுமார் 90 விழுக்காடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
வட்டி மானியம்
தமிழக அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வட்டி சுமையைக் குறைக்க, 3 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. 2013-14 ஆம் நிதியாண்டில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளில், இக்கழகம் முதலீடு செய்ய, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு ரூ.37.50 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது என்றார் அமைச்சர் தங்கமணி.