ரம்ஜான் பெருநாள்... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வாழ்த்து
சென்னை: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், ரம்ஜான் பெருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாக்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
நாடெங்கும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம். மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.
அமைதி, மனிதர்களுக்கு சேவை செய்தல், குழந்தைகளிடம் அன்பு செலுத்துதல், பெண்களின் உரிமைகளைப் பேணுதல், குடும்ப உறவுகளை அரவணைத்தல், பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்தல், அவர்களோடு அன்புடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுதல் போன்ற நல்லுபதேசங்களை சொல்கிறது இஸ்லாம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், இஸ்லாம் வலியுறுத்துகின்ற தன்மைகளை முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மதவெறி, வன்முறை, சமூகக் கொடுமைகள் போன்ற மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் நீங்கி, அமைதியும், அன்பும், சமூக நல்லிணக்கமும் தழைக்கவும், பிறருக்கு ஈந்து உதவும் பண்பு வளர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஈகைத் திருநாளில் உறுதி ஏற்போம் என்று அவர் கூறியுள்ளார்.
நாளை சிறப்புத் தொழுகை:
ஈகைப் பெருநாளையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நாளை காலை 8.15 மணியளவில் சிறப்புத் தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி ராயப்பேட்டை கபரஸ்தான் எதிரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டுத் திடலில் நடைபெறும் என கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈதுல் பித்ர் எனும் ஈகை திருநாளை கொண்டாடும் பெருமக்களுக்கு எனது இதயம் கனிந்த ஈகை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகளை மற்ற நாட்களிலும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து,சகோதர சமுதாய மக்களோடு இணக்கமான உறவுகளைப்பேணி,நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் வாழ்வோம் என்றும் இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.
மதம்,இனம்,மொழி பேதங்களுக்கு அப்பால் மானுடத்தை போற்றவும்;மனித நேயத்தை வளர்க்கவும்;பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை வேரறுக்கவும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கவும்; சாத்தியமான அனைத்து வழிகளிலும் பயணித்து சமத்துவ இந்தியாவை உருவாக்குவோம் என்றும் இந்நன்னாளில் உறுதி ஏற்போம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications