ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு.. சிபிஐ அலுவலகத்தில் ப. சிதம்பரம் ஆஜர்
Recommended Video
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த வருடம் மே 15ம் தேதி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. எனவே டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் சிதம்பரம் இன்று ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
நேற்று, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையில் சிதம்பரம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த வழக்குகள் தொடர்பாக, அடுத்த மாதம் 10ம் தேதிவரை சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.