ஐபிஎல்: லலித் மோடிக்கு காத்திருக்கும் "சம்மன்".. மறுபடியும் "மனிதாபிமான" உதவியை செய்வாரா சுஷ்மா?
சென்னை: ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, சென்னை போலீஸ் எப்போது வேண்டுமானாலும் சம்மன் அனுப்பலாம் எனத் தெரிகிறது.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கியதால் நாட்டை விட்டு ஓடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி. அத்தகையவருக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் லலித் மோடியோ தனக்கு பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை பலரையும் சிக்கலில் சிக்க வைத்துள்ளார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி.
லலித் மோடி...
2005 -ஆம் ஆண்டு பி.சி.சி.ஐ துணைத்தலைவர்களில் ஒருவராக பொறுப்பேற்று கொண்ட லலித் மோடி, ஐ.பி.எல். அமைப்பு உருவாக காரணமாக இருந்தவர். 2008-ஆம் ஆண்டு அந்த அமைப்பின் முதல் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மோசடி புகார்...
2009ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தல் நடந்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டன. அப்போது, நிதி மற்றும் அன்னியச் செலாவணி முறைகேட்டில் ஈடுபட்டதாக லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது.
பதவி பறிப்பு...
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், 2010ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகள் முடிந்ததும், லலித் மோடியின் ஐபிஎல் தலைவர் பதவி பறிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, நாட்டை விட்டு வெளியேறினார் அவர்.
புளூ கார்னர் நோட்டீஸ்...
லண்டனில் குடியேறிய லலித் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. மேலும், வழக்குகளில் தேடப்படும் நபர் என புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ரூ. 700 கோடி மோசடி...
ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவிற்கு லலித் மோடி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. லலித் மோடியின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மோசடி செய்ததை விட 3 முடங்கு தொகை செலுத்த நேரிடும் என சட்டநிபுணர்கள் கூறுகின்றனர்.
கருணாநிதிக்கும் தொடர்பு...
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளின் பின்னணியில் திமுக தலைவர் கருணாநிதி, தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தார்.
சென்னை போலீஸ்...
தற்போது லலித் மோடி மீதான வழக்கை மீண்டும் விரைவுபடுத்த சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர் மீதான வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் இழுபறியாக உள்ளது.
உத்தரவுக்காக...
தற்போது லலித் மோடி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சூட்டோடு சூடாக இதை விரைவுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக மூத்த அதிகாரிகளின் உத்தரவுக்காக அவர்கள் காத்துள்ளனர்.
மீண்டும் சம்மன்...
குறிப்பாக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது. மேலும் சம்மனை வாங்காமல் தவிர்க்க தலைமறைவாக இருப்பதாக ஐபிசி 172வது சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.