அடுத்து சென்னை பறக்கும் ரயில் கட்டுமான விபத்து.. கம்பி விழுந்து கார் கண்ணாடி உடைந்தது
சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபத்து ஏற்பட்டு நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர் உயிரிழந்த சோகம் நீங்கும் முன்பு இன்று சென்னை பறக்கும் ரயில் பணிகளின்போதும் விபத்து நடந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது, இரும்பு கம்பி கீழே விழுந்ததில் பைக்கில் பயணித்த 32வயது கிரிதரன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்தார். பரங்கிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிஎஸ்டி சாலையில் இந்த விபத்து நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிலையில், புழுதிவாக்கத்தில், இன்று காலை, பறக்கும் ரயில் கட்டுமான பணியின்போதும் அதேபோன்ற விபத்து நடந்துள்ளது. மிகப்பெரிய இரும்பு சாரம் மேலேயிருந்து கீழே விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற கார் மீது கம்பி விழுந்தது.
இதனால், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிருஷ்டவசமாக காரில் பயணித்தவர் காயமின்றி தப்பினார். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை நடுவேயான பறக்கும் ரயில் விரிவாக்க பணியின்போது இந்த விபத்து நடந்துள்ளது.
பணிகள் நடைபெறும் பகுதியை சுற்றிலும் தடுப்பு அமைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனிடையே, காரில் பயணித்தவரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
மெட்ரோ ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் கட்டுமான பகுதியில் கூடுதலாக எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படவில்லை. தவறு செய்தோர் மீது மெத்தனமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்தான் பிற விதிமீறல் நபர்களுக்கு வசதியாகிவிடுவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.