தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் கனவு.. ஜெ. மறைவால் நிராசையாகிறதா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவில் ஒன்றாக இருந்தது பிரதமராவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தது. ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் அவருடன் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் கனவு
சென்னை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மறைந்த ஜெயலலிதாவிற்கு பிரதமர் கனவு இருந்தது. அதிமுகவினரும் நாடாளுமன்றத்தில் இரட்டை இலை மலரும் என்று போஸ்டரெல்லாம் அடித்து தூள் கிளப்பினர். ஆனால் ஜெயலலதாவிற்குப் பிறகு தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் என்ற கோஷம் அடங்கிப் போய்விட்டதா?
கடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரின் கோஷமாக இருந்தது இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்பது தான். லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என்று கணக்கு போடப்பட்டது ஆனால் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் அந்த கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை ஜெ.
இதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவிற்கு இருந்த பிரதமர் கனவு. ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு அந்த ஆசை அவருக்கு இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் 14 மாநில கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது கூட்டணி அமைத்து அதன் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கோட்டா முறையில்
தமிழர்கள் பிரதமரைவிட உயர் பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். காரணம் அது ஒருவிதத்தில் நியமனப் பதவி மாதிரிதான். மத்தியில் ஆளும் கட்சி விரும்புகிறவரை அதற்குக் கொண்டுவந்துவிட முடியும். தவிர, எப்போதும் பிரதமர் பதவி வட இந்தியாவிலேயே இருந்துவருவதால், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளைத் தென்னிந்தியருக்கு ஒரு கோட்டா போல அளித்து சமன்செய்வதை நேரு காலம் முதல் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.
ஓரிரு முறை தேடி வந்த வாய்ப்பு
பிரதமராகும் வாய்ப்பு தமிழகத் தலைவர்களுக்கு முன்பு இருந்ததா என்றால், அது ஓரிரு முறை மட்டுமே இருந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவேனும் அறியப்பட்டிருக்கக்கூடிய தலைவராக இருந்தவர்கள் மிகக் குறைவு. காங்கிரஸுக்குள் மாநிலத் தலைவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இருந்த தமிழகக் காமராஜர் அப்படி அறியப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவர் பிரதமராகும் வாய்ப்பு, நேரு- சாஸ்திரி காலத்துக்குப் பின்னர் கனிந்திருந்தது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை.
மூப்பனார் மறுத்தால் தேவகவுடாவுக்கு வாய்ப்பு
டெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை 1996-ல் ஏற்பட்டது. அப்போது தான் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜி.கே.மூப்பனாரைக் கேட்க அவர் மறுத்துவிடவே, கர்நாடகாவைச் சேர்ந்த தேவகவுடா பிரதமரானார்.
இந்தி தெரிந்தால் பிரதமர்
இந்தி தெரிந்த ஒருவரே பிரதமராக ஆளுமை செய்ய முடியும் என்ற தோற்றம் நீண்ட காலமாக இருக்கிறது. இதனால் ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளிலும் தேர்ந்தவரான ஜெயலலிதாவிற்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று அனைவரும் கருதினர். எனினும் ஜெயலலிதா கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை விரும்பாதவர், சர்வாதிகார ஆட்சி நடத்துபவர் இவரால் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.
ஜெயலலிதாவுடன் முடிந்ததா கனவு?
எனினும் மாநில கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமரானால் மாநிலங்களின் நலனில் அக்கறை காட்டப்படும் என்று அதிமுகவினர் எதிர்வாதம் வைத்தனர். என்றாலும் 2014 தேர்தலில் மோடி பிரதமராகிவிட 2019 நாடாளுமன்றத் தேர்தலை எண்ணிக் காத்திருந்தவர்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதா? மாநில அரசியலை நடத்துவதிலேயே காலத்தை கடத்தும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இனியும் ஒரு பிரதமர் என்ற கனவு எப்போது ஏற்படும் என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.