செந்தில் பாலாஜியின் கலகக்குரலுக்கு பின்னணியில் இளவரசி மகன் விவேக்
அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக செந்தில் பாலாஜி எழுப்பும் கலகக் குரலுக்கு பின்னணியில் இளவரசியின் மகன் விவேக் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை: இளவரசியின் மகன் விவேக் தனக்கு பின்னர் இருக்கும் தைரியத்தில்தான், கருர் செந்தில் பாலாஜி தற்போது கலகக் குரல் எழுப்பி வருகிறார்.
கரூர் அதிமுகவில் பல கோஷ்டிகள் உள்ளன. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு இப்போது பகிரங்கமாக கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. தனது தொகுதியில் மருத்துவக்கல்லூரி வர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக கூறி மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறிவருகிறார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறியதை அடுத்து அந்த பதவிக்கு அடுத்ததாக இளவரசியின் மகன் விவேக் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய அறிவிப்பை சசிகலா விரைவில் வெளியிடுவார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
விவேக் ஜெயராமன்
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் அண்ணி இளவரசியின் மகன்தான் விவேக். போயஸ்தோட்டத்தில் வளர்ந்த விவேக் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவர்.
கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவினரால் அறியப்பட்டு வருகிறார். ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை கவனித்து வந்தாலும் அரசியலிலும் ஒரு கண் உண்டாம்.
சசிகலா குடும்பம்
டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவர் திகார் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா குடும்பத்தில் தினகரன், திவாகரன் இடையே இடைவெளி அதிகமாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாலமாக இருந்த விவேக். இப்போது தனது சித்தப்பா திவாகரனின் மகன் ஜெயந்தனுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர்
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியை அளித்தார். இப்போது தினகரனும் கைது செய்யப்பட்டுள்ளதால் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, விவேக்கை துணைபொதுச்செயலாளர் ஆக்கினால் பிரச்சினை இருக்காது சசிகலா நினைக்கிறாராம்.
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து இதற்கான வேலைகளை செய்கிறாராம் விவேக். கடந்த சில தினங்களுக்கு முன்பு 19 எம்எல்எக்களிடம் பேசி விவேக்கை ஆதரிக்க சம்மதம் பெற்றுள்ளார். மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் விவேக் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
கலகக்குரல்
தனக்கு பின்னால் விவேக் இருக்கும் தைரியத்தில்தான் செந்தில் பாலாஜி தனது தொகுதியில் மருத்துவக்கல்லூரி வர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி வருகிறார்.
ஆட்சி கவிழும்
டிடிவி தினகரன் பின்னால் சில எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறி வருகின்றனர். விவேக்கை சில எம்எல்ஏக்கள் ஆதரிக்கின்றனர். சசிகலாவிற்கு ஆதரவாக சிலர் பேசுகின்றனர். ஓபிஎஸ் பின்னால் சில எம்எல்ஏக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி பின்னால் கொங்கு மண்டல எம்எல்எக்கள் பலர் உள்ளனர். மொத்தத்தில் அதிமுக எம்எல்எக்கள் இப்போது அணி அணியாக பிரிந்துள்ளதால் விரைவில் ஆட்சி கவிழும் என்றே ஆருடம் சொல்கின்றனர்.
ஏன் இந்த வேலை
கடந்த 2011 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அசைக்க முடியாத அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. ஆட்சி முடியப் போகும் நேரத்தில் அவரது மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அது முதல் மாஜி அமைச்சரானார். 2016 சட்டசபைத் தேர்தலில் தொகுதி மாற்றப்பட்டது. எப்படியோ ஜெயித்து விட்டார். ஆனால் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதற்குள் என்னென்னவோ நடந்து விட்டது. பல அணிகளாக அதிமுக பிரிந்துள்ள நிலையில் தனது பங்குக்கு கலகக்குரல் எழுப்பி வருகிறார் செந்தில் பாலாஜி.
50 நாட்கள் நீடிக்குமா?
அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகள் நீடிக்கும் என்றும் 50 ஆண்டுகள் அதிமுகதான் தமிழகத்தை ஆளும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வருகிறார். ஆனால் ஆள் ஆளுக்கு எழுப்பும் கலகக்குரலில் அதிமுக ஆட்சி 50 நாட்கள் நீடிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.