பள்ளி மாணவர்களே... காகித விமானம் செய்ய தெரியுமா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு
நெல்லை, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான விமான தயாரிப்பு போட்டி அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நெல்லை: தென் மாவட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விமானம் தயாரிக்கும் போட்டி நெல்லை மாவட்டம் மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடத்தப்படவுள்ளது.
விண்வெளி மற்றும் விமானவியல் ஆராய்ச்சியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் விமான பொறியாளர் சங்கம் வரும் கல்வி ஆண்டு முதல் இலவச சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதல் நடவடிக்கையாக 'உலக விண்வெளி வாரம்' கொண்டாடப்படுகிறது. அப்போது, இஸ்ரோ மற்றும் விமானவியல் பொறியாளர் சங்கம் இணைந்து விமானத்துறை மற்றும் விண்வெளித்துறை சார்ந்த போட்டிகளை 'விண்வெளி ஓலம்பியா 2017' என்ற பெயரில் நடத்தவுள்ளது.
இப்போட்டிகள் அக்டோபர் 9ம் தேதி நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள 'இஸ்ரோ பிரோபல்ஸன்' வாளகத்தில் நடைபெறவுள்ளன. இதில் காகித விமான போட்டி, கிளைடார் விமான போட்டி, தண்ணீரில் இயங்கும் ஜெட் ராக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். மேலும், இப்போட்டிக் களத்தில் மாணவர்கள் தங்களது விமானவியல் துறை கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்தாண்டு மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த 12ம் வகுப்பு வரை மட்டும் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும், போட்டியில் பங்குபெறும் மாணவர்களுடன் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டிப்பாக வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.