ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து ரெய்டு.. அதிகாரிகள் அதிரடி
ஜெயலலிதாவுக்கு சிகிக்சை அளித்த டாக்டர் சிவக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து வருமான வரி துறை சோதனை நடைபெற்றது.
திருச்சி: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமாரின் திருச்சி வீட்டுக்கு சென்ற ஐடி அதிகாரிகள் அங்கு பூட்டை உடைத்து சோதனையில் அதிரடியாக இறங்கினர்.
சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகள் ஆகியவற்றில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாரின் வீட்டுக்கும் அதிகாரிகள் சோதனையிட முடிவு செய்தனர்.
இதையடுத்து திருச்சி ராஜா காலனி, 3-ஆவது குறுக்குத் தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது சிவக்குமார் சென்னையில் இருந்ததால் திருச்சி வீடு பூட்டியிருந்தது.
இதையடுத்து மேல் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து இரு அதிகாரிகள் கொண்ட குழு தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் கீழ்தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைக்கவில்லை. அதன் சாவியை அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.
மொத்தம் 190 இடங்களில் நேற்று தொடங்கிய இந்த ரெய்டு, 40 இடங்களில் முடிவடைந்து தற்போது மீதமுள்ள 150 இடங்களில் இன்றும் தொடர்கிறது. இதனால் சசிகலா குடும்பத்தினர் வசமாக சிக்குவது உறுதி என்று கூறப்படுகிறது.