ஆபரேஷன் கிளீன் பிளாக் மணியின் ஒரு பகுதியாக சசி குடும்பத்தின் வீடுகளில் 200 கார்களில் சென்று ரெய்டு!
'ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி' என்பதன் ஒரு பகுதியாக சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் 200 கார்களில் சென்று அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் 200 கார்களில் சென்று ரெய்டு நடத்தியது ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி என்பதன் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இது கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று விளக்கம் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக 'ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி' என்ற நடவடிக்கையின்படி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் கீழ் சென்னை, பெங்களூர், கூடலூர், மன்னார்குடி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களிலிருந்து 6 ஆணையர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் சென்னை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் சோதனையின்போது அலுவலக கார்களில் அதிகாரிகள் வரவில்லை.
மாறாக 'சீனி வெட்ஸ் மகி' என்ற ஒரே மாதிரியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 200 கார்களிலேயே அதிகாரிகள் 190 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்றனர். அலுவலக வாகனத்தில் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உஷார் ஆகிவிடுவர் என்பதால் கல்யாண கோஷ்டி போல் அதிகாரிகள் செயல்பட்டது தெரியவந்தது.