ஐடி ரெய்டு: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரிக்க வருமானவரித்துறை முடிவு
பெங்களூரு சிறையிலேயே சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக பெங்களூரு சிறையிலேயே சசிகலாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பரில் சசிகலா, உறவினர் வீடுகள் உள்பட 189 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. 2,000 அதிகாரிகள், 355 நபர்கள்.. இப்படித்தான் சசிகலா குடும்பத்தை குறிவைத்து இமாலய ரெய்டு நடந்தது.
இந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டு அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா, ஜெயா டிவி மேலாளர் நடராஜன், கொடநாடு மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் டாக்டர் சிவகுமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சசிகலா, இளவரசி ஆகியோரிடமும் விசாரிக்க வருமான வரித்துறையினர்திட்டமிட்டுள்ளனராம். பெங்களூரு சிறைக்கு சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இது தொடர்பான அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டனவாம். சில தினங்களில் பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என கூறப்படுகிறது. இதனிடையே சசிகலா சிறையில் மவுனவிரதம் இருப்பதால் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.