மீட்கப்பட்ட ரூ 1 கோடிக்கு ஆவணங்கள் எங்கே...? அதிமுக சேர்மன் வீ்ட்டில் ரெய்டு
புளியங்குடி: புளியங்குடி நகராட்சி அதிமுக தலைவர் கல்லூரியில் ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டதையடுத்து அங்கு வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி நகர அதிமுக செயலாளராக இருப்பவர் சங்கரபாண்டியன். இவர் புளியங்குடி நகராட்சி தலைவராகவும் இருக்கிறார். இவருக்கு சொந்தமான பிஎட் கல்லூரி ஒன்று புளியங்குடி அருகே டிஎன் புதுக்குடியில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அந்த கல்லூரியில் லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. அது தொடர்பாக புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி டிஎன் புதுக்குடி-தென்காசி ரோட்டில் ஹோட்டல் நடத்தி வரும் பீரப்பா, புளியங்குடி அருணாச்சல தெருவை சேர்ந்த ராமர், காலாடி தெற்கு தெருவை சேர்ந்த ராமர், ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மீட்கப்பட்டது.
இந்த பணம் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த புளியங்குடி நகர செயலாளர் பால்ராஜ் போலீஸ் நிலையத்திலும், தென்காசி தொகுதி தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரிடம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்ததால் அவர்கள் இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் விவரம் எதையும் போலீசார் தெரிவிக்காததால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் புளியங்குடியில் உள்ள சங்கரபாண்டியனுக்கு சொந்தமான பிஎட் கல்லூரி, மற்றும் அவரது இரண்டு வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது ரூ.1 கோடி வருமானம் வந்தது தொடர்பாக அவர்கள் சங்கரபாண்டியனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட பணம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவை இன்று கோர்ட்டில் ஓப்படைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications