ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீடு தொடங்கி ஆந்திரா, கர்நாடகா வரை நீளும் வருமான வரி சோதனை
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவிற்கு சொந்தமான சித்தூர் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : போயஸ் கார்டன் வீட்டிற்கு நெருக்கமான சேகர் ரெட்டியைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவிற்கு சொந்தமான அண்ணாநகர் வீட்டிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திலேயே தலைமைச் செயலாளரின் வீட்டில் சோதனை நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். இது முக்கிய அரசியல் பெரிய புள்ளிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமமோகன் ராவிற்கு சொந்தமான அண்ணாநகர் வீடு தொடங்கி ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள அவரது வீட்டிலும் அவரது மகனுக்கு சொந்தமான 13 இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே பெங்களூருவில் உள்ள ராமமோகன் ராவிற்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போயஸ் கார்டன் தொடர்பு
சேகர் ரெட்டியிடம் இருந்து சமீபத்தில் 131 கோடி ரூபாய் பணமும், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளின் பிடியில் இருக்கிறார். சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

சேகர் ரெட்டியுடன் தொடர்பு
சேகர் ரெட்டியிடம் நடந்த தொடர் விசாரணையில் சிக்கியவர்தான் ராம மோகன் ராவ் என்பது தெரிய வந்துள்ளது. சேகர் ரெட்டி கொடுத்த தகவலால்தான் இந்த சோதனை நடந்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசிடம் இருந்து பல ஒப்பந்தங்களைப் பெற்று சேகர் ரெட்டி நடத்தி வந்தார். இதற்கு ராம மோகன் ராவ் உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதவியேற்ற போதே சர்ச்சை
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராமமோகன் ராவ் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராம மோகன் ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகியது குறிப்பிடத்தக்கது. ராம மோகன் ராவ் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியிடை நீக்கம்
வருமான வரித்துறையினரின் சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ் மீது வழக்கு பதியப்படும்போது, அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார். இதனையடுத்து வேறு தலைமைச் செயலாளர் பணியில் அமர்த்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்
ராமமோகன் ராவிடம் நடத்தப்படும் விசாரணையில் இருந்து மேலும் பல பெரிய புள்ளிகள் சிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சேகர் ரெட்டிக்கும், ராம மோகன் ராவுக்கும் நெருக்கமானவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications