"சின்னம்மா"வைப் பார்த்து விட்டுத் திரும்பிய தினகரனை ரெய்டுடன் வரவேற்ற ஐடி!
அடையாறில் உள்ள வீட்டிற்குள் டிடிவி தினகரன் இருக்கும் நிலையில் அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சசிகலாவை பார்க்க டிடிவி தினகரன் பெங்களூரு சென்று விட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கணவர் நடராஜனை பார்க்க கடந்த மாதம் சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை.

பெங்களூருவில் தினகரன்
இந்நிலையில்,நேற்று பிற்பகல் தனது மனைவி மகளுடன் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார் தினகரன். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானவரி ரெய்டு
காலையில் அவரது வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், உறவினர்கள், உதவியாளர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

சுற்றி வளைத்த ஐடி
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் தொடங்கி, நமது எம்ஜிஆர் அலுவலகம், வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் என வருமான வரித்துறையினரின் ஆக்டோபஸ் கரங்கள் விரிந்துள்ளன. சசிகலா, டிடிவி தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், அலுவலகங்கள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினகரன் ஆதரவாளர்கள் புகார்
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விசாரணை முடிந்த நிலையில் டி.டி.வி. தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரனை மிரட்டி பணிய வைக்க முயற்சி என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போல ரெய்டு மூலம் எங்களை மிரட்டி பணியவைக்க முடியாது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

டிடிவி தினகரன் வீடுகள்
மன்னார்குடியில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினகரன் பண்ணை வீடு
புதுச்சேரியில் ஆரோவில் பகுதியில் பொம்மையார் பாளையத்தில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. நேற்று இரவிலேயே வாகனங்கள் அங்கு சென்றுள்ளன. மழையால் காட்டுப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் பண்ணை வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் ரெய்டு நடைபெறுகிறது. இது தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications