டி.ஜி.பி ராஜேந்திரன் பதவிநீட்டிப்பில் தவறு இல்லை... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு!
தமிழக காவல் துறை இயக்குனராக டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதில் தவறு இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
மதுரை : குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் செயலாற்றி வந்தார். கடந்த மாத இறுதியில் அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசு ராஜேந்திரனின் பணியை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்தது.
இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கதிசேரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பது சரியல்ல என்று மனுதாரர் கோரியிருந்தார். எனவே ராஜேந்திரனின் பணி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரகூ டிஜிபி ராஜேந்திரன் மீது குறிப்பிட்ட எந்தப் புகாரும் இல்லை என்று கூறியிருந்தது. மேலும் பணி நியமனம் குறித்த அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கிய மதுரை நீதிமன்றம் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதில் தவறு இல்லை. ராஜேந்திரன் மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், 2 வாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார் தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.