பாலமேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு- ஆயிரக்கணக்கான காளைகள், வீரர்கள் பங்கேற்பு #jallikattu2018
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி களைகட்டியது. ஆயிரக்கணக்கான காளைகள் இதில் பங்கேற்றன.
மதுரை: உழவர் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் எழுச்சியுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ், மாடு பிடி வீரர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து வாடி வாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து சீறி வந்த காளைகளை இளைஞர் பட்டாளம் ஆவேசத்துடன் ஆர்ப்பரிப்புடன் அடக்க முயற்சித்து மகிழ்ந்தது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.