ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே போராட்டம் வாபஸ்.. நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் எழுச்சி போராட்டம்
தூத்துக்குடி: தமிழர்களின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த புரட்சி போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல பகுதிகளில் தொடர்ந்து 4வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து முதலில் துவங்கிய போராட்டம், தீப்பொறி போல தமிழகம் முழுவதும் பரவியது. சமூக வலைதளங்களில் மூலம் ஒன்று திரண்ட கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் அறவழியில் போராட்டத்தை துவங்கினர். அதன்பின் அந்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல வேகமாக பரவியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.
நெல்லையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டம் பாளை வ.உ.சி.,மைதானத்தில் நேற்றும் தொடர்ந்தது. காலை சுமார் 7 மணி முதல் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தன்னெழுச்சியாக வரத்துவங்கினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 'பீட்டா'வுக்கு தடை செய் என்ற கோஷத்துடன் வந்துகொண்டிருந்தனர். வணிகர்கள், கடைகளை அடைத்துவிட்டு பாளை மார்க்கெட் பகுதியிலிருந்து பேரணியாக வஉசி மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டதால், கேலரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
தூத்துக்குடி மாவட்டத்திலும் போராட்டம் தீவிரமடைந்தது. தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் திரண்ட இளைஞர்கள் 4வது நாளாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குளத்தூர் பஸ் நிலையம் முன்பு இளைஞர்கள் காளையுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். குளத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் ஒரு இளைஞர் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டியபடி வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் என கோஷமிட்டார். அவருக்கு அங்கிருந்த இளைஞர்கள் முதலுதவி செய்தனர்.
விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை துவங்கிய போராட்டம் விடிய விடிய தொடர்ந்து நடந்தது. 3வது நாளாக இன்றும் இடைவிடாது போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் கோவில்பட்டியிலும் போராட்டம் நடைபெற்றது.