ஜல்லிக்கட்டு போராட்டம்... வாடிப்பட்டிக்கு வந்த சரத்குமாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வாடிப்பட்டிக்கு சென்ற சமக தலைவர் சரத்குமாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பிலும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நேற்று அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பெண்கள், மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தாக்கி, அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் இந்த போராட்டத்தில் பங்கேற்கச் சென்றார். ஆனால் சரத்குமாரின் வருகையை அங்கிருந்தவர்கள் விரும்பவில்லை. அவருக்கு அங்கிருந்த மாணவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, சரத்குமார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். ஜல்லிக்கட்டு விவகாரத்தை, நடிகர் சங்க அரசியலோடு முடிச்சு போட்டு, வீண் அரசியல் செய்வதாக, சரத்குமார் மீது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை உடனடியாக வெளியே செல்ல கோஷமிட்டனர். இதனால் அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.மேலும் அதிமுகவினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சியினர் யாரும் வரத்தேவையில்லை என்பது போராட்டக்காரர்களின் நிலைப்பாடாகும். ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் பதற்றமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.