ஜவடேக்கருக்கு 'தண்ணி காட்டிய' விஜயகாந்த்.. பாஜக-தேமுதிக கூட்டணி அம்பேல்?
சென்னை: தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேக்கர்-விஜயகாந்த் நடுவேயான சந்திப்பில் கூட்டணி குறித்த தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் கூட்டணி பற்றி தகவல் தெரிவிக்கிறேன் என்று கையசைத்துவிட்டு சென்றுவிட்டார் ஜவடேக்கர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவுடன் பல கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கும் திட்டத்தோடு நேற்று சென்னை வந்தார் பிரகாஷ் ஜவடேக்கர்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரை சந்தித்து பேசிய ஜவடேக்கர் இன்று விஜயகாந்த்தை சந்தித்தார். தமிழிசை சவுந்தர் ராஜனும் உடன் வந்திருந்தார்.
1 மணி நேரம் பேச்சு
விஜயகாந்த்-ஜவடேக்கர் சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சு வார்த்தை நடத்தினர். ஊடகங்களும் இந்த சந்திப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. எனவே பாஜகவோடு தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜவடேக்கர் நழுவல்
சந்திப்பை முடித்த பிறகு, ஜவடேக்கர் இதுகுறித்த உறுதியான தகவலை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த ஜவடேக்கர் கூட்டணி குறித்து பிடிகொடுத்து எதையும் பேசவில்லை.
பேட்டி
விஜயகாந்த்துடனான சந்திப்பு திருப்தியாக இருந்ததாக மட்டுமே தெரிவித்த அவர், மோடி அரசு தமிழக மக்களுக்கு நலன்கள் பல செய்துள்ளதாகவும், திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்துடன் கூடிய ஆட்சி அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த வாரம்
மேலும், விஜயகாந்த்துடன் பேசிய அம்சங்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிவிட்டு அடுத்த வாரம், மீண்டும் சென்னை வருவதாகவும், அப்போது பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளன என்பது குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு கிளம்பினார் ஜவடேக்கர்.
தோல்வி
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: ஜவடேக்கர் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துவிட்டது என்பதுதான் உண்மை. பாஜகவிடம் பிடிகொடுக்காமல் விஜயகாந்த் பேசியுள்ளார். விஜயகாந்த்துடனான தனது 2வது சந்திப்பிலும் அவர் பிடிகொடுக்காதது ஜவடேக்கருக்கு எரிச்சலை தந்துள்ளது. இதனால் அதிருப்தியோடு ஜவடேக்கர் கிளம்பியுள்ளார் என்று தெரிவித்தனர்.
திமுகவோடு நெருக்கம்
எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து, தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் நிறைய இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். கூட்டத்தின் முடிவில், உங்கள் மனசுப்படியே முடிவை எடுப்பேன் என விஜயகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக பக்கம் பாஜக
இந்நிலையில்தான், பாஜகவோடு கூட்டணி அமைப்பது குறித்து பிடிகொடுக்காமல் விஜயகாந்த் நழுவியுள்ளார். எனவேதான், ஜவடேக்கரும், ஒரு வாரம் காலக்கெடு கேட்டுவிட்டு டெல்லி விரைந்துள்ளார். விஜயகாந்த் கையை உதறினால் பாமகவோடு தோழமை காட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.