ஆர்.கே.நகர் மக்களின் குறைகளைக் கேட்க "ஸ்பெஷல் ஆபீசர்".. ஜெ. அதிரடி!
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிய தனி அதிகாரியை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒரு நல்ல அரசு என்பது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக திகழ வேண்டும். தமிழக அரசு அவ்வாறே மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலான கொள்கைகளை வகுத்து, அதற்குரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
சட்டமன்றம், அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறைகள் ஆகியவற்றை விவாதிக்கும் மன்றமாக திகழ்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தாலும், தங்கள் தொகுதி பற்றிய பொதுவான பிரச்சனைகள் பற்றியும் எடுத்துக் கூற இயலும். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை, வேண்டுகோள் ஆகியவை குறித்து சட்டமன்றத்திலே பொதுவாக விவாதிக்க இயலாது. எனவே தான், தனியரின் குறைகளைத் தீர்ப்பதற்கு பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தங்களது தலைமையிடத்திலே இருந்து திங்கட்கிழமை தோறும் பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் விதமாக மக்கள் குறை தீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று, மாதம் ஒரு முறை ஒரு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்த்திடும் வகையில் பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காணும் வகையிலான 'அம்மா திட்டம்' பொதுமக்கள் தொலைபேசி மூலமே தங்களது குறைகளை தெரிவிக்கும் வண்ணம் 24 மணி நேரமும் செயல்படும் 'அம்மா சேவை மையம்' ஆகியவை பொதுமக்களின் குறைகளை களைவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அரசு சேவைகளை பொது மக்கள் எளிதில் பெறும் வகையில் 10,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் தனிப் பிரிவு, தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் பொதுமக்கள் நேரடியாக மனுக்களை அளிக்கலாம்.
இதுவன்றி, இணையதளம் மூலமும் மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது தொடர்புடைய துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை முதலமைச்சர் தனிப் பிரிவின் தனி அலுவலர் மேற்பார்வையிட்டு வருகிறார்.
என்னை தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்கள் தங்களது குறைகளை எளிதில் எனது கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் ஒரு சிறப்பு வழிமுறையைக் கடைபிடிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, முதலமைச்சரின் தனிப் பிரிவின் தனி அலுவலர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுவதும் அங்கேயே இருந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.
அந்த மனுக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.