திமுகவின் 2 ஜி ஊழல் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு: ஜெ
அரக்கோணம்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க. முன்னின்று நடத்தியது. இந்த ஊழலால் தமிழகம் தலைகுனிவை சந்தித்தது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை தடுக்க தி.மு.க. தவறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கூறியதாவது:
காங்கிரஸ் கூட்டணி அரசு
''சாமானிய மக்களுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அவர்களின் ஆட்சியில் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள்
காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வரை தி.மு.க.வும் அங்கம் வகித்தது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை தி.மு.க. தடுக்க தவறிவிட்டது.
நதிநீர் பிரச்சினை
அதேபோல், காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தி.மு.க. மவுனம் காத்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.இருப்பினும், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து போராடி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். எனவே, இந்த நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்'' என்றார்.
அந்நிய முதலீடு
இதைத் தொடர்ந்து திருவள்ளூரில் தேர்தல் பிரசாரம் செய்த ஜெயலலிதா, ''கடந்த தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் அதிகாரத்திலும், தமிழகத்தில் ஆட்சியின் அதிகாரத்தில் இருந்தபோதும், தி.மு.க. மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரித்தது.
2 ஜி ஊழல்
அதேபோல், மாபெரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க. முன்னின்று நடத்தியது. இந்த ஊழலால் தமிழகம் தலைகுனிவை சந்தித்தது.
விலைவாசி உயர்வு
அதேபோல், மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. காங்கிரஸ் அரசால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மக்களின் துயரங்களை போக்கும் தேர்தல்'' என பேசினார்.
விடுதலைக்கான தேர்தல்
இந்த லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் தேர்தல். கடந்த சட்டமன்ற தேர்தலை விட மகத்தான வெற்றியை அஇஅதிமுகவுக்கு அளிக்க வேண்டும். 2011ல் 117 வாக்குறுதிகள் தரப்பட்டு 150க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுக்காக பாடுபடும் ஒரே கட்சி அஇஅதிமுக தான்.
வேட்பாளர் இல்லை
இந்த மேடையில் வித்தியாசமான ஒன்றை கவனத்திருப்பீர்கள். நான் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற இந்த மேடையில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரே இல்லை. இதற்கு என்ன காரணம். இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான விதிமுறைகளும், ஆணைகளும், கட்டுப்பாடுகளும் தான் காரணம்.
அலைகடலென மக்கள்
கடந்த ஒரு மாத காலமாக நான் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள். இதனை கண்டு எதிர்க்கட்சிகள் கலங்கிப்போய் இருக்கின்றன. மக்கள் வெள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டு எதிர்க்கட்சிகள் கலங்கிப்போய் இருக்கின்றன. குறிப்பாக திமுக மிரட்சி அடைந்துள்ளது. விரத்தி அடைந்துள்ளது. எனவேதான் திமுகவினர் தற்போது அஇஅதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா பிரதமராக முடியாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பிரதமர் பதவி முக்கியமில்லை
அஇஅதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திமுகவினரே உணர தொடங்கிவிட்டனர். எங்களை பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பதோ, அமைச்சர் பதவி என்பதோ முக்கியமில்லை.
எதிர்கட்சிகள் மிரட்சி
எனக்கு வரும் கூட்டத்தை கண்டு எதிர்க்கட்சிகள் மிரட்சி அடையவதில் ஆச்சரியமில்லை. இங்கு கூடும் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது.
தேர்தல் ஆணையம் விதிமுறை
அஇஅதிமுக வேட்பாளரை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்யும்போது, அந்த தொகுதி வேட்பாளர் கலந்துகொள்ளக் கூடாது. மேடையில் இருக்கக் கூடாது. அவரது புகைப்படமும் இருக்கக் கூடாது. வேட்பாளரின் பெயரைக் கூட நான் உச்சரிக்கக் கூடாது. இந்த தொகுதியின் வேட்பாளர் இவர்தான் என்று கூட நான் சொல்லக் கூடாது என்பதெல்லாம் இதுவரை தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விந்தையான ஆணைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
வேட்பாளரின் செலவு
அவ்வாறு மீறி வேட்பாளரின் பெயரை நான் உச்சரித்தாலோ அல்லது அவர் மேடையில் இருந்தாலோ, அவரது புகைப்படம் இருந்தாலோ அந்தக் கூட்டத்திற்கான செலவை தேர்தல் ஆணையம் வேட்பாளரின் செலவில் சேர்த்துவிடுமாம். இது என்ன நியாயம். என்னை பொறுத்த வரையில் மேடை அமைப்பு, கட் அவுட்டுகள், தோரணங்கள், பதாகைகள், நாற்கா-கள் போன் செலவுகளை வேட்பாளர் செலவில் சேர்ப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
சொந்த செலவு
ஆனால், கூட்டம் அதிகமாக கூடுகிறது என்பதை காரணம் காட்டி, பொதுமக்கள் தானாகவே தங்கள் சொந்த செலவில் வருகிறார்கள். அதனையும் வேட்பாளர் கணக்கில் சேர்ப்பது எப்படி நியாயமாகும். ஒரு லோக்சபா தொகுதி என்பது ஒரு மாவட்டத்திற்கு இணையானது.
ஜனநாயகத்திற்கு எதிரானது
நான் ஒரு லோக்சபா தொகுதியில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறேன் என்றால், என்னை பார்க்க வேண்டும், எனது பேச்சைக் கேட்க வேண்டும் என்று ஆர்வத்தில் அந்த தொகுதி மக்கள் தாங்களாகவே வாகன வசதியை ஏற்படுத்தி வருகிறார்கள். அதனை எப்படி தடுக்க முடியும். குறிப்பிட்ட அளவில்தான் மக்கள் வரவேண்டும். அதற்கு மேல் வரக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும். எப்படி தடுக்க முடியும். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு எதிரான செயல். ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இவ்வாறு பேசினார்.