பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது மாதிரி வேட்பாளர்களை தேர்வு செய்தார் ஜெயலலிதா: நடிகை விந்தியா
நீலகிரி: பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போல ஜெயலலிதா வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார் என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடிகை விந்தியா அதிமுகவுக்காக அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் நீலகிரி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஊட்டியில் அவர் பேசுகையில்,
வேட்பாளர்கள்
பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போன்று ஜெயலலிதா வேட்பாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளார். அவர்களை தேர்வு செய்யும் முன்பு அவர்கள் நல்லவர்களா, நேர்மையானவர்களா, குற்றப் பின்னணி எதுவும் உள்ளதா என்று பலவற்றை விசாரித்துள்ளார்.
மாமன், மச்சான்
பிற கட்சியினரோ சிறை சென்றவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து, மாமன், மச்சான், ஜாதிக்காரரர், பங்காளி, பணக்காரர் ஆகியோர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளனர்.
ராசா
நாங்கள் எல்லாம் கார், ஜீப்பில் வந்து வாக்கு கேட்கிறோம். ஆனால் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவோ ஜாமீனில் வந்து வாக்கு கேட்கிறார்.
கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி சுத்த தமிழில் ஏராளமான பொய் பேசுகிறார். ஆனால் நானோ சுமாரான தமிழில் உண்மையை பேசுகிறேன்.
2ஜி
2ஜி ஊழல் வழக்கில் தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரணை செய்தபோது தான் கருணாநிதி காங்கிரஸ் அரசை எதிர்த்தார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அவர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அழுது ஆர்ப்பாடம்
சென்னை கடற்கரையில் வைக்கப்பட்ட கன்னகி சிலையை அகற்றியபோது கருணாநிதி அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால் இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போனபோது மவுனமாக இருந்தார்.
மானாட மயிலாட
கருணாநிதி தமிழக மக்களை பற்றி நினைத்த நாட்கள் விட மானாட மயிலாட நிகழ்ச்சியை பற்றி தான் அதிக நாட்கள் நினைத்துள்ளார் என்றார் விந்தியா.