கருப்பு சட்டையை கழற்றி எரித்த அதிமுகவினர்: வெள்ளைக்கு மாறினர்
கோவை: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுநாள்வரை அணிந்திருந்த கறுப்பு சட்டையை கழற்றி தீயிட்டு கொளுத்திய அதிமுகவினர் வெள்ளை உடை அணிந்து உற்சாகமாக வலம் வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து பூந்தமல்லியில் ஒன்றிய குழு தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் அதிமுகவினர் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இதேப்போல் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.சுந்தர்ராஜன் தலைமையில் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

கறுப்பு சட்டை எரிப்பு
ஜெயலலிதா சிறைக்குப் போன செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து துக்கம் அனுஷ்டித்தனர். கோவையில் எம்.எல்.ஏ., மலரவன் தலைமையில் கூடிய அதிமுகவினர் 20க்கும் மேற்பட்டோர், தாங்கள் அணிந்திருந்த கறுப்புச் சட்டையைக் கழற்றி சாலையில் போட்டு தீ வைத்துக் கொளுத்தினர்.
இன்றைக்கு தீபாவளி
பின்னர் வெள்ளைச் சட்டையை அங்கேயே அணிந்து கொண்டு, இன்றுதான் தங்களுக்கு தீபாவளி என்று கூறியபடியே கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications