வேட்பாளர் பெயரை சொல்லாமலேயே வாக்க கேட்ட ஜெ.: தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்கிறார்
சேலம்: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் மேடையில் வேட்பாளர்களின் பெயரைக் கூட சொல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா வேட்பாளரின் பெயரை சொல்லாமலேயே வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நாமக்கல் மற்றும் சேலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரச்சாரம் செய்தார். பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நட்சத்திர பேச்சாளர்
கட்சியின் தலைவர், நட்சத்திர பேச்சாளர் ஆகியோரின் பெயரோ, படமோ பிரச்சாரக் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்தால் அவர்களின் செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மக்கள் தானாக பிரச்சாரத்திற்கு வந்தால் அதை எப்படி வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்ப்பது.
கட்அவுட்கள்
தேர்தல் நேரத்தில் தலைவர்களின் புகைப்படம் அடங்கிய போர்டுகள், கட் அவுட்டுகள் வைப்பது வழக்கமான ஒன்று. இது காலம், காலமாக செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளால் வேட்பாளரே பிரச்சாரத்திற்கு வரமுடியாமல் உள்ளது. ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக வேட்பாளரே பிரச்சாரத்திற்கு வரமுடியாத நிலை உள்ளது.
வேட்பாளர்
வேட்பாளரின் பெயரைக் கூட சொல்ல முடியாமல் உள்ளது. வேட்பாளரின் அருகில் நிற்கவும் கூடாது, பெயரை உச்சரிக்கவும் கூடாது என்கிறார்கள். பிரச்சாரத்திற்கான அனைத்து செலவுகளும் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுவது ஜனநாயகத்தை கேலி கூத்தாகும் செயல்.
வழக்கு
தேர்தல் ஆணையத்தின் இந்த போக்கை எதிர்த்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். வேட்பாளரின் பெயரை கூற முடியாத நிலை உள்ளது. அதனால் இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மின்வெட்டு
தமிழகத்தில் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக துவங்கப்பட்ட மின் நிலையங்களில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதை எதிர்கட்சிகள் தான் ஊதி ஊதி பெரிதாக்குகின்றன.
காங்கிரஸ்
தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரக் கூடாது. காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.