தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உட்கார்ந்து பேசும் ஜெயலலிதா
சென்னை: உடல் நலப்பிரச்சினை அதனால் ஏற்படும் சோர்வு ஒருபக்கம் வாட்டினாலும், ஆட்சியை தக்கவைக்கவேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒரு மணி நேரம் வரை நின்று கொண்டு பேசும் ஜெயலலிதா, இம்முறை மேடைகளில் அமர்ந்து அரை மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா கிளம்புகிறார் என்றாலே அதிமுக தொண்டர்களிடையே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளும். பிரச்சாரத்தில் பேசுவதை கேட்பதை விட ஜெயலலிதாவை பார்ப்பதற்காகவே வெயிலையும் பொருட்படுத்தாமல் வருகின்றனர்.
கடந்த பல பொதுக்கூட்டங்களில் நின்று கொண்டுதான் பேசுவார் ஜெயலலிதா. திமுகவையும், கருணாநிதியையும்தான் அதிகம் திட்டுவார். இம்முறை திட்டினாலும் திரு. கருணாநிதி என்று கூறுகிறார் ஜெயலலிதா. தீயசக்தி என்ற வார்த்தையை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை என்பதுதான் உண்மை.
திருமண விழாவில் பேசினாலே ஒரு குட்டிக்கதையை சொல்லுவார் ஜெயலலிதா. ஆனால் அரைமணி நேரம் பேசும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் குட்டிக்கதை சொல்லவில்லை. இதுவே சற்று போரடிக்கிறது என்கின்றனர் தொண்டர்கள்.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட நின்றுகொண்டு பேசிய ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர் சற்று அதிகமாகவே சோர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
வழக்கில் இருந்து விடுதலை பெற்று வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் 2015ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் பங்கேற்று பேசும்போதுதான் முதன்முறையாக மேடையில் அமர்ந்து கொண்டு பேசினார். இப்போது பிரச்சார மேடைகளிலும் சௌகரியமாக சேர் போட்டு அமர்ந்து தான் பேசுகிறார்.
பொதுக்கூட்ட மேடைக்கு ஜெயலலிதா வந்து செல்ல வசதியாக, மேடை வரை புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு, இரு பக்கங்களிலும் பழைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேடைப்படிகளில் ஏறுவது ஜெயலலிதாவுக்கு சிரமம் என்பதால், மேடை ஏற தாற்காலிக லிப்ட் அமைக்கப்படுகிறது.
ஜெயலலிதாவிற்காக தேக்கு மரத்தில் செய்த குஷன் வைத்த நாற்காலி, மைக் வைக்க ஒரு டேபிள் போடப்பட்டு அதற்கு அருகில் ஒரு சின்ன டேபிள். அதில் அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் என வைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் தெரியாமல் இருக்கும் வகையில் மேடையில் பல ஏசிகளும் ஏர் கூலர்களும் பொருத்தப்படுகின்றன.
மேடையில் ஜெயலலிதா மட்டுமே அமர்கிறார். வேட்பாளர்கள் இந்த மேடைக்குக் கீழே சிறிய மேடையில் வரிசைப்படி அமர வைக்கப்பட்டு, பின்னர் அவர்களின் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்யும் போது மட்டுமே நின்று வணக்கம் கூறுகின்றனர்.
மேடை ஏறிய உடன் பொதுமக்களைப் பார்த்து கை கூப்பி வணங்கும் ஜெயலலிதா இரட்டை விரலை காட்டி உற்சாகப்படுத்துகிறார். பேச்சை முடித்த உடன் எழுந்து நின்று மீண்டும் வணங்கி இரட்டை விரலை காட்டி விட்டு செல்கிறார். ஜெயா டிவியில் தப்பித்தவறி கூட ஜெயலலிதா நடந்து செல்வதைக் காட்டுவதில்லை.
ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் முன்பெல்லாம், வாகனத்தின் உள்புறம் ஹாலோஜன் விளக்குகளை ஒளிரவிட்டு தொண்டர்களுக்கு தரிசனம் தருவார் ஜெயலலிதா. ஹாலோஜன் விளக்குகளால் வேனுக்குள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் இந்த முறை ஜெயலலிதாவின் பிரசார வேன்களில் முழுக்க எல்.ஈ.டி விளக்குகளுக்கு மாற்றிவிட்டார்கள்.
உடல் நலப்பிரச்சினையால் உடல் சோர்வு இருந்தாலும், ஹெலிகாப்டரில் வந்து அரைமணி நேரம் பிரச்சாரம் செய்து விட்டு மக்களை சந்தித்து விட்டு செல்கிறார் ஜெயலலிதா. காணொலியில் பிரச்சாரம் செய்கிறார் ஜெயலலிதா என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கையாம்.