கடலோர மாவட்டங்களில் ரூ. 209 கோடியில் 5674 வீடுகள் - ஜெ. திறந்து வைத்தார்
சென்னை: தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் 209 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5674 வீடுகளை இன்று காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
கடந்த 26.12.2004ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் தமிழக கடற்கரையோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. எனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் எளிதில் பாதிப்புள்ளாகும் வீடுகளை சீரமைத்து மீளக்கட்டிட தமிழ்நாடு அரசு 2005ஆம் ஆண்டு உலக வங்கி நிதி உதவியுடன் அவசர கால சுனாமி மறுகட்டமைப்புத் திட்டத்தை தீட்டியது.
அதன்படி 11 மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் உள்ள 444 கிராமங்களைச் சார்ந்த, கடல் அலை உயர் மட்ட நிலையிலிருந்து 200 முதல் 1000 மீட்டர் தூரத்திற்குள் இயற்கைச் சீற்றங்களில் எளிதில் பாதிப்புள்ளாகும் வகையில் அமைந்திருந்த 14,364 வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சீரமைத்து மீளக்கட்டித்தர தமிழக அரசு முடிவு செய்தது.
அதனடிப்படையில், அவசர கால சுனாமி மறுகட்டமைப்பு திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்த வீடுகளில், முதற்கட்டமாக 8251 வீடுகள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 27.3.2012 அன்று திறந்து வைக்கப்பட்டன.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 5674 வீடுகள் 209 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.
சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த 5674 வீடுகளை 17.9.2013 அன்று முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த வீடுகள் அனைத்தும் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்திடும் வகையில் 10 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வீடுகள் அனைத்தும் இயற்கை இடர்பாடுகளான நில நடுக்கம், புயல் மற்றும் ஆழிப்பேரலை போன்றவற்றால் ஏற்படும் தாக்கத்தை தாங்கக்கூடிய தன்மையுடன் கட்டப்பட்டுள்ளன.
இவைபோன்ற நிலையான தரமிக்க வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதால் கடலோரத்தில் வசிக்கும் குடும்பங்கள் தங்களது வசிப்பிடம் பற்றிய கவலையினை மறந்து தங்களது வாழ்வாதாரப் பணிகளில் கவனம் செலுத்த வழி ஏற்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் அவரவர் சொந்த இடத்திலேயே வீடுகள் கட்டப்படுவதால், அந்த கட்டுமானக் காலத்தில் வேறு இடத்தில் வாழ்வதற்கு ஆயிரம் ரூபாய் ஒரே தவணையில் இடமாற்றுப் படியாகவும் மற்றும் மாத வாடகையாக 500 ரூபாய் வீதம் 18 மாதங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.