விஷத் தண்ணீரிலிருந்து மக்களை காப்பாற்றியவருக்கு ஜெ. ரூ.1 லட்சம் பரிசு!
சென்னை: தருமபுரி மாவட்டம், மேட்டுக்கொட்டாய் கிராமத்தில் விஷத் தண்ணீர் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசினை முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
" தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பனைக்குளம் ஊராட்சி, மேட்டுக்கொட்டாய் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியிலிருந்து பிக்கலி ஊராட்சி பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
9.11.2013 அன்று அதிகாலை 4 மணியளவில், மேட்டுக்கொட்டாய் கிராம தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியிலிருந்து நீர் விநியோகம் செய்ய அங்கு வந்த தனியார் நிறுவன பணியாளர் எஸ்.விஜய் என்பவர், நீர்தேக்கத் தொட்டி அருகிலும், நீர் விநியோகம் செய்யும் அறை அருகிலும், பாதையிலும், எலிகளைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் குறுணை போன்ற விஷப் பொடி தெளிக்கப்பட்டு, அங்கு கடும் நெடி வீசியதால் நீர் தேக்கத் தொட்டியிலுள்ள தண்ணீரிலும் விஷம் கலந்திருக்கலாம் என்று உணர்ந்தார்.
உடனடியாக, நீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் அனுப்பும் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமல்வாடி கிராம மோட்டார் இயக்கும் நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலும் தண்ணீர் அனுப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொண்டதுடன், மேட்டுக்கொட்டாய் கிராம தொட்டியிலிருந்து நீர் விநியோகத்திற்காக வெளியேறும் வால்வினை மூடி நீர் வெளியேறுவதை உடன் நிறுத்தினார்.
பின்னர், பிக்கிலி ஊராட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு மேட்டுக்கொட்டாய் கிராம தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியிலிருந்து அப்பகுதியிலுள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு பெறப்பட்ட தண்ணீரை விநியோகிக்க வேண்டாம் என்று எச்சரித்து, விஷம் கலந்ததாக அறியப்பட்ட தண்ணீர் விநியோகத்தை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியிலிருந்து நீர் விநியோகம் செய்யும் தனியார் நிறுவன பணியாளர் எஸ்.விஜய்யின் சமுதாய அக்கறையோடு கூடிய கடமை உணர்வையும் சமயோஜிதமாக செயல்பட்டு, விஷம் கலந்ததாக அறியப்பட்ட தண்ணீர் விநியோகத்தை தடுத்து நிறுத்தி, கிராம மக்களை விஷத் தண்ணீர் பாதிப்பிலிருந்து காப்பாற்றியதையும் பாராட்டும் விதமாக அவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டி வாழ்த்தினார்.
முதல்வரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்றுக் கொண்ட நீர் விநியோகம் செய்யும் பணியாளர் விஜய், தனது செயலை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கியதற்கு தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications