கேரளாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை சேலத்தில் அறிமுகம் செய்த ஜெ.
சேலம்: அதிமுக வேட்பாளர்கள் 46 பேரை ஆதரித்து சேலத்தில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த ஜெயலலிதா, கேரளா மாநிலத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இன்று சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் 46 வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.
கேரள மாநிலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருவனந்தபுரம் - டாக்டர் பி.ஜீ.ரமேஷ், சித்தூர் - என். மயில் சாமி, மலம்புழா - சி.பி. ஸ்ரீதரன், நெம்மாரா - கே.மேனகா, தேவிகுளம் (தனி) - ஆர்.எம். தனலட்சுமி, உடும்பன் சோழா - சோமன், பீர்மேடு - சி.அப்துல் காதர் ஆகிய 7 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.
நலத்திட்டங்களை பட்டியலிட்டு, திமுக ஆட்சி காலத்தை திட்டிய பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் ஜெயலலிதா. இந்த தொலைக்காட்சி வாயிலாக பிரச்சாரத்தை பார்த்தவர்கள், கேரளா மாநிலத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுகிறது. ஆனால் கேரளாவில் 7 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால் இரட்டைக்கு இலைக்கு வாக்கு கேட்கவில்லை ஜெயலலிதா.
சேலத்தில் இன்றைக்கு வெயில் 103 டிகிரி கொளுத்தியது. ஆனாலும் 4 மணிக்கு பேச வந்த ஜெயலலிதாவைப் பார்க்க காலை 11 மணிமுதலே காத்திருந்தனர் தொண்டர்கள். பச்சை கலரில் தொப்பி கொடுத்திருந்தாலும் கொளுத்திய வெயிலுக்கு கருகித்தான் போனார்கள் தொண்டர்கள். இதில் முதியவர் ஒருவரின் உயிர் பறிபோனதுதான் சோகம்.
சென்னை, காஞ்சியில் மாலை 6 மணிக்கு பிரச்சாரம் செய்தது போல உள் மாவட்டங்களிலும் ஜெயலலிதா மாலை நேரங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.