ஜாமீனில் வெளியே வந்தாலும் அரசியல் எதிரிகளுக்கு ஜெ. உடனடி 'ஆப்பு' வைக்க வாய்ப்பில்லை!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கர்நாடகா பரப்பன அஹ்ரகாரத்தில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது அரசியல் எதிரிகளை ஜெயலலிதா பழிவாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் அப்படி உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
பலத்தை அதிகரித்த தீர்ப்பு:
அதேசமயம், இந்த வழக்கினால் அதிமுகவின் பலமானது குறைந்துவிடும் என்று மற்ற கட்சிகள் கணக்கு போட்ட நிலையில், அவற்றை எல்லாம் தவிடுபொடி ஆக்கியுள்ளது இந்த தீர்ப்பு.
தேர்தல் வெற்றிக்கு அச்சாரம்:
அடுத்த தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாகவே மாறி உள்ளது இந்த வழக்கினால் ஏற்பட்ட மக்கள் மனநிலை மாற்றம்.
சட்ட ரீதியாக குறைந்த பலம்:
எப்போதெல்லாம் இதுபோன்ற துன்பங்கள் சுழட்டி அடிக்கின்றதோ அப்போதெல்லாம் ஜெயலலிதா இரண்டு மடங்கு பலத்துடன் செயல்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இப்போதும் அவர் வெளியே வருகிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் சட்ட ரீதியாக பலமில்லாதவராக.
கட்சியின் பிறந்த நாளில் ஜாமீன்:
அதிமுகவின் 43 ஆவது பிறந்த நாளில் கிடைத்திருக்கும் இந்த ஜாமீனால் அதிமுகவினரிடம் மகிழ்ச்சியையும், மற்றவர்களிடம் ஒரு கிலியையையும் தோற்றுவித்திருக்கின்றது.
தீர்ப்பு எப்போது சாதகம்?:
ஆனால், அவருக்கு எதிரான தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. அது நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதா தன் மீதான தீர்ப்பிலிருந்தும் வெளியே வரும்போதுதான் அவர் முழு பலம் பெற்றவராக மீண்டும் மாற முடியும்.
வாய்ப்புகள் இருக்குது:
இருப்பினும் தற்போது அவர் வெளியே வருவதால், தனது இருப்பிடத்திலிருந்தே எதிரிகளை குறி வைத்து அவர் தனது அதிமுக அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
பழிவாங்கும் முயற்சி:
குறிப்பாக தனக்கு எதிராக விமர்சித்தவர்கள், செயல்பட்டவர்களை அவர் சத்தமின்றி பழிவாங்க முயலலாம். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது.
ஜாமீன் ரத்தாகும் அபாயம்:
உடல் நிலை சரியில்ல என்று கூறி ஜாமீன் வாங்கி விட்டு ஜெயலலிதா அரசியலில் ஈடுபடுகிறார், பழிவாங்குகிறார் என்று யாராவது சுப்ரீம் கோர்ட்டை அணுகினால், அவரது ஜாமீன் ரத்தாகி விடும் அபாயம் உள்ளது.
என்ன நடக்கப் போகுது?:
எனவே சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவர் நிரபராதி என்று மீண்டு வரும் வரை சற்று அடக்கி வாசிக்கத்தான் வேண்டும். அதேசமயம், அரசியல் எதிரிகளை அவர் எப்படி பழிவாங்குவார் என்ற திகில் கலந்த எதிர்பார்ப்பு எழுந்திருப்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
கடுமையான விமர்சனங்கள்:
மேலும், ஜெயலலிதா இல்லாத தைரியத்தால் பல தலைவர்கள் வெளிப்படையாக கடுமையான விமர்சனங்களில் ஈடுபட்டனர். இதற்குக் காரணம், ஓ.பன்னீர் செல்வம் அரசால் தனித்து முடிவெடுக்க முடியாது, தெரியாது என்ற நிலை இருந்ததால்.
விமர்சனங்கள் குறைய வாய்ப்பு:
ஆனால் தற்போது ஜெயலலிதா மீண்டும் சென்னைக்கு வரவுள்ளார். எனவே பழைய பன்னீர் செல்வம் போல இப்போதைய பன்னீர்செல்வத்தை பார்க்க முடியாது என்பது உண்மை. எனவே எதிர்க்கட்சிகளின் ஆரவார எதிர்ப்பு, கிண்டல், கேலி, விமர்சனம் சற்று குறையும் என்றே தெரிகிறது.