அம்மா முதல்வராகணும்… மடப்புரம் காளி கோவில் உண்டியலில் ஜெயலலிதாவின் ஜாதகத்துடன் மனு!
மானாமதுரை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவேண்டும் என்ற கோரிக்கை மனுவோடு அவரது ஜாதகத்தையும் மடப்புரம் காளி கோவில் உண்டியலில் போட்டுள்ளனர் அதிமுக தொண்டர்கள்.
மானாமதுரையை அடுத்து திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் பௌர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோரி ரூபாய் நோட்டுக்கள், தங்கம், வெள்ளி, தங்கநாணயம் என ஏராளமானவற்றை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கம். இம்மாத உண்டியல் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி துணை ஆணையர் ரோசாலின் சமதா முன்னிலையில் திறக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, கோயில் ஊழியர்கள், பள்ளி மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
காணிக்கை பணம் ரூபாய் 7லட்சத்து 14ஆயிரத்து 415 ரொக்கமும், 89.200 கிராம் தங்கமும், 106.600 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணி அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம், உறுப்பினர்கள் சுதா, சுரேஷ், கல்யாணசுந்தரம், செல்லம் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை அதிமுக தொண்டர் ஒருவர் உண்டியலில் போட்டிருக்கிறார். வழக்குகளில் இருந்து அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்ற கோரிக்கை சீட்டும் அதனுடன் எழுதி போட்டுள்ளார்.
உண்டியல் எண்ணும் ஊழியர்கள் ஜாதகத்தையும், கோரிக்கை மனுவையும் அதிகாரிகளிடம ஒப்படைத்தனர். கடந்த மாதம் 10லட்ச ரூபாய் அளவில் வருவாய் இருந்தது. தங்கம், வெள்ளியும் கூடுதலாக கிடைத்தன. இம்மாத வருவாய் குறைந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதா முதல்வராக அதிமுகவினர் எத்தனையோ வேண்டுதல்களை செய்துவருகின்றனர். மண்சோறு தொடங்கி யாகங்கள் வரை செய்கின்றனர். கோரிக்கை மனுவோடு ஜாதகத்தை உண்டியலில் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.