அப்பல்லோவில் ஜெயலலிதா.. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை தவிர்த்த அரசு ஊழியர்கள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஆயுத பூஜை நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர், தலைமைச் செயலக அரசு ஊழியர்கள்.
அனைத்து விழாக்களைவிடவும் ஆயுதபூஜையின்போது தலைமைச் செயலகத்தில் உற்சாகமாக விழா களைகட்டும். தோரணங்கள், இனிப்புகள் என தலைமைச் செயலகமே ஜொலிக்கும்.

அனைத்து துறை ஊழியர்களும், செலவை பங்கிட்டு கொண்டு கொண்டாடி மகிழ்வார்கள். ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் கூட விழாவில் ஆர்வமாக பங்கேற்று மகிழ்வர்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் வாசலில் தோரணம் கட்டுவதை தர்ம சங்கடமாக கருதுகிறார்கள் அரசு ஊழியர்கள். எனவே, ஒட்டுமொத்த துறைகளும் ஆயுதபூஜைக்கு அமைதியாகிவிட்டனர். ஆயுதபூஜைக்குள் முதல்வர் வீடு திரும்பிவிடுவார் என நினைத்து ஊழியர்கள், கொண்டாட்டத்திற்கு தயாராகியிருந்தனர். சில தினங்களுக்கு முன் ஊழியர்கள் எல்லோரிடமும் பணம் வசூலிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பல்லோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா வீடு திரும்ப நாளாகும் என கூறப்பட்டதால், வசூலிக்கப்பட்ட தொகை ஊழியர்களுக்கு திருப்பித் தரப்பட்டுவருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களுரு பரப்பனஹரா சிறையில் அடைக்கப்பட்டபோதும், ஆயுதபூஜையை தவிர்த்தனர் தலைமைச் செயலக ஊழியர்கள். கடந்த வருடம் ஜெயலலிதா பொறுப்பேற்றதையடுத்து மகிழ்ச்சியாக ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications