ஜெ. படத்தை எரித்து பாடை கட்டி ஈமச் சடங்கு செய்து குரூர போராட்டம்! #TNNeedsKaveri
ஓசூர்: தமிழக எல்லைக்கு அருகே உள்ள அத்திபலே பகுதியில் காவிரி பிரஜா சக்தி என்ற கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை எரித்தும், பாடை கட்டியும், ஈமச் சடங்கு செய்தும் மோசமான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இன்று கர்நாடக பந்த்தும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள கர்நாடக பகுதியான அத்திபலேவில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.
காவிரி ப்ரஜா சக்தி என்ற அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை தீவைத்து எரித்தனர். அதேபோல பாடை கட்டி அதில் ஜெயலலிதா படத்தை வைத்து ஈமச்சடங்கும் செய்து குரூரமாக போராட்டம் நடத்தினர்.
பந்த் காரணமாக கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள் முடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு 800க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழ் டிவி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள் இயங்கவில்லை. பெங்களூரு, மைசூரு, மன்டியா மாவட்டங்களில் போராட்டம் தீவிரமாக உள்ளது.
அதேசமயம், வட கர்நாடகத்தில் போராட்டத்தால் பெரிய அளவில் தாக்கம் இல்லை.