ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டாததால் நிறுத்தப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் வினியோகம்!
கன்னியாகுமரி: முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஓட்டப்படாததால் பொதுமக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச மிக்சி மற்றும் மின் விசிறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாகர்கோயில் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரையடுத்த சரக்கல்விளை பகுதியில் இன்று தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் போன்ற பொருட்கள் வழக்கப்படவிருந்தது.
அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் வைத்து வினியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததால், அவற்றை வாங்கிச்செல்ல அப்பகுதியை சேர்ந்த சுமார் ஐநூறு பேர் அங்கு திரண்டனர்.
ஆனால் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் ஃபேன்களில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறித்த ஸ்டிக்கர் இன்னும், ஓட்டப்படாததால் அதனை பொதுமக்களுக்கு வழங்ககூடாது என அதிமுகவினர், அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தியதாக கூறப்படுவதாக தமிழ் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் வழங்கல் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அதிகாரிகளை கண்டித்தும், அரசை கண்டித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவும் அந்த சேனல் கூறுகிறது.