4 ஆண்டு சிறை.. 10 ஆண்டு தடை... என்னவாகும் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம்?
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஜெயலலிதாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விதான் தமிழக அரசியலில் முதன்மையான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலராக மட்டுமின்றி அக்கட்சியின் ஒரே தலைவராக இருப்பவர் ஜெயலலிதாதான். தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் தண்டனைக் காலத்துக்குப் பின்னர் 6 ஆண்டுகாலம் அதாவது மொத்தம் 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
அதிமுகவை காப்பாற்ற முடியுமா?
தற்போது 66 வயதாகும் ஜெயலலிதா இன்னும் 2 பொதுத்தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற நிலைதான் தற்போது இருக்கிறது. தேர்தலில் போட்டியிடாமலேயே ஜெயலலிதாவால் அதிமுகவை காப்பாற்ற முடியுமா? என்பது தவிர்க்க முடியாத கேள்வி.
எதிர்காலமே அவ்ளோதான்
குன்காவின் தீர்ப்பால் ஜெயலலிதான் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது... இனி அரசியலில் அவருக்கான இடம் எதுவுமே இல்லை.. எல்லாமே முடிந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.
விஸ்வரூபத்துடன் வருவார்
அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கான தண்டனை நிச்சயம் ரத்தாகும். அவர் பார்க்காத வழக்குகள் எதுவும் இல்லை.. ஏற்கெனவே 2001ம் ஆண்டு அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்ட போதும் இப்படித்தான் சொன்னார்கள்.. ஆனால் மீண்டும் விஸ்வரூபத்துடன் எழுந்து வருவார் ஜெயலலிதா என்பது அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை.
ஜாமீன் மட்டும் கிடைக்கட்டும்..
மேலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டாலே போதும்... தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகவே திகழ்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
முதல்வர் பதவி கனவுதான்
என்னதான் ஜாமீனில் ஜெயலலிதா வந்துவிட்டாலும் இனிமேல் அவர் முதல்வர் பதவியை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.. ஏனெனில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகச் சரியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பது சட்டவாளர்களின் கருத்து.
இப்படி ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் பல "கேள்விகளை"க் கொண்டதாகவே இருக்கிறது.