ஜெ. உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக... டிராபிக் ராமசாமி மீது வழக்குப்பதிவு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தினமும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரது நலம் விசாரித்து வருகின்றனர். அவ்வாறு வந்து செல்வோரின் பேட்டி மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து வருகின்றனர்.
ஆனால், இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பல்வெறு வதங்கிகள் பரவியது. எனவே, அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். இதுவரை எட்டு பேர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிஷோர் கே.சுவாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த வாரம் புகார் அளித்தார். மேலும் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா மீதும் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது அதன் தொடர்ச்சியாக கே.சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில் டிராபிக் ராமசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.