கேஸிலிருந்து விடுபட வேண்டும், வேறு எதைப் பற்றியும் ஜெ.வுக்குக் கவலை இல்லை... ஈவிகேஎஸ் பொளேர்!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எப்படி விடுதலையாவது என்பதுதான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அக்கறையாக இருக்கிறதே தவிர, தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட அவர் தயாராக இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகளின்; தவறான கொள்கைகளின் காரணமாக கரும்பு விவசாயமே அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டு வருகிறது. உலகத்திலேயே சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா இன்றைக்கு மிக சோதனையான கால கட்டத்ததை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 5 லட்சம் கரும்பு விவசாய குடும்பங்கள் அதை விட்டு வெளியேறுகின்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் நியாயமான விலைக்காக போராடிக்கொண்டிருக்கும்போது, நாடு முழுவதிலும் உள்ள தனியார் கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.21 ஆயிரம் கோடியாக உயர்ந்து வருகிறது. 'யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்;பதைப் போல" மத்திய அரசு ரூ.6000 கோடியை நிலுவைத் தொகையை செலுத்த வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய கடனாக கரும்பு ஆலைகளுக்கு வழங்கியிருக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி 7 லட்சத்து 15 ஆயிரம் டன்னாக இருந்தது. நடப்பாண்டையும் சேர்த்து தற்போது சர்க்கரை இருப்பு 8 லட்சத்து 85 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இதை உரிய விலைக்கு விற்க முடியாமல் கிடங்குகளில் கேட்பாரற்று தேங்கியியிருக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத்தொகை ரூ.900 கோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்ற நிலையில் தமிழ்நாடு அரசு பொது விநியோக திட்டத்தில் நுகர்வோருக்கு குடும்ப அட்டைகள் மூலம் வழங்குவதற்காக சர்க்கரை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு நிலுவையில் இருக்கிற தொகையை செலுத்துவதற்கு உரிய சூழலை உருவாக்காமல் இருப்பதைவிட, விவசாயிகளுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.
அதேபோல, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் சர்க்கரை மீது தமிழகத்தில் 5 சதவிகித மதிப்பு கூட்டுவரி விதிக்கப்படுவதால் 1 டன் சர்க்கரை விலையில் ரூ.1200 கூடுதலாகிவிடுகிறது. இதனால், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்;தில் குறைந்த விலையில் சர்க்கரை குவிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்த சூழலில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை பொது சந்தையில் விற்க முடியாமலும், தமிழக அரசும் வாங்க மறுக்கிற நிலையிலும், உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை கிடங்குகளில் தேங்கியிருக்கிறது. இதுகுறித்து
ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. இதனால், கரும்பு விவசாயமே தமிழகத்தில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, உடனடியாக தமிழக அரசு சர்க்கரை மீதான மதிப்பு கூட்டுவரியை ரத்து செய்ய வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து எப்படி விடுதலையாவது என்பதுதான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அக்கரையாக இருக்கிறதே தவிர, தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட அவர் தயாராக இல்லை. எந்த பிரச்சனை குறித்தும் எவரையும் சந்திக்க அவர் விரும்பவில்லை. தலைமைச்செயலகத்தின்; அறைக்குள்ளே இருந்துகொண்டு காணொளிகாட்சி மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர் இதுவரை அமைச்சரவை கூட்டத்ததைக்கூட்டி எதையும் விவாதித்து முடிவெடுக்க முன்வரவில்லை.
எனவே, இத்தகைய சூழலில், கரும்பு விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், கரும்பாலை நிர்வாகத்தினர் ஆகியோரை அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும், மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் ஒன்றுக்கு ரூ.500 மானியமாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் கரும்பு விவசாயம் காப்பாற்றப்பட வழி ஏற்படும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கலை இலக்கிய அணித் தலைவர்:
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணிக்கு தலைவராக நாஞ்சில் ராஜேந்திரன் நியமிக்கப்படுவதாகவும், அமைப்பாளர்களாக ஆலடி சங்கரய்யா, தஞ்சை தமிழ்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் ஈ.வி.கே.எஸ். அறிவித்துள்ளார்.