ஜெ.வுக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது: அப்பல்லோவில் பொன்னையன் தகவல்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது என பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் பணிக்கு திரும்புவார் எனவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 50வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விரைவில் அவர் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதயம், நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தற்போது முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.