அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை.. பிப்.24ல் திறக்கிறார்களாம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை அமைக்கும் பணி தொடங்கியது.
Recommended Video
சென்னை : ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தின் முகப்பில் அக்கட்சியை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது.
அந்த சிலை அருகே உள்ள படிக்கட்டுகள் நேற்று திடீரென்று அகற்றப்பட்டன. இதனால், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அந்த சிலைக்கு அருகிலேயே 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து இன்று காலை முதல் அங்கு ஜெயலலிதாவின் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகிலேயே அமைக்கப்படும் ஜெயலலிதாவின் சிலை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.