தமிழக வெள்ள நிவாரணத்துக்கு தேவை ரூ8,481 கோடி- உடனே ரூ2,000 கோடி வழங்குக... மோடிக்கு ஜெ. கடிதம்!!
சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் நிவாரண நிதி வழங்கவும் ரூ8,481 கோடி தேவைப்படுவதாகவும் இதில் ரூ2,000 கோடியை உடனே வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வடமாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக இடைவிடாத பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. வட தமிழகமே வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.
வடதமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளின் வெள்ளப் பெருக்காலும் மழை வெள்ளத்தாலும் சென்னை நகரமே மூழ்கிக் கொண்டிருக்கிறது.
தற்போது தென்மாவட்டங்களிலும் பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வெள்ள சேத விவரங்களைப் பார்வையிட மத்திய குழுவை அனுப்புமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சீர் செய்யவும், மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதியுதவி அளிக்க வேண்டும்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களும், தமிழகத்தின் பல மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன.
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் மீட்புப் பணிகளுக்காக மேற்கண்ட படை வீரர்களை உடனடியாக அனுப்பி உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நெய்வேலியில் கடந்த 9ம் தேதி 437 மி.மீ. மழை பதிவானது. அதே போல, சென்னையிலும், நவம்பர் 20ம் தேதிக்குள்ளாக, கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழைக்கு தமிழகத்தில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள், நீர் நிலைகள், மின்சாரம் வழங்கும் மின் கட்டமைப்புகள் என மாநிலத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
எனவே, நிவாரண உதவியாக உடனடியாக ரூ.500 கோடியை ஒதுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவைமட்டுமின்றி தமிழகத்தில் பழுதான உள்கட்டமைப்புகளை சரி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் மொத்தம் ரூ.8,481 கோடி தேவைப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்க வேண்டும்; நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.2,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.