சொத்துக்காக வீட்டுக் காவலில் வைத்த தாய்.. கமிஷனர் அலுவலகத்தில் ஜேப்பியார் மகள் பரபரப்பு புகார்
சென்னை: சொத்துக்காக தன்னை வீட்டிலேயே என் தாய் மற்றும் சகோதரிகள் சிறை வைத்துவிட்டதாக மறைந்க கல்வியாளர் ஜேப்பியாரின் இரண்டாவது மகள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷீலா(49). இவர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:
நான் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜேப்பியாரின் இரண்டாவது மகளாவேன். எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
சத்தியபாமா இல்லத்தில் வசிப்பு
எனது கணவர் என்னுடன் வாழ விரும்பாமல் என்னை விட்டு பிரிந்து புனித ஜோசப் கல்லூரியை நிர்வகித்து வருகிறார். நான் எனது தந்தை ஜேப்பியார் இல்லமான சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்துள்ள வீட்டில் வசித்து வந்தேன்.
நிரந்தர அறங்காவலர்
எனது தந்தை இறந்த பிறகு என் தாயார் ரெமி, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் என் தாயார் ரெமி எனக்கு நல்லது செய்வது போல் என்னிடம் பேசி, எனக்கு ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் கல்லூரி மற்றும் மாமல்லன் கல்லூரி இவற்றை நடத்த புதிதாக ஒரு கல்வி அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி தருவதாகவும், அதற்கு பதிலாக, நான் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ராஜினாமா
நானும் மறுப்பு தெரிவிக்காமல் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன். பின் கடந்த ஒரு வருடத்தில் என் தாயார் ரெமி அவர் வாக்குறுதி தந்தபடி நடந்துகொள்ளும்படியும், மேலும் ஜேப்பியாரின் நான்கு பெண் வாரிசுகளில் நானும் ஒருவர் என்று எனக்கு ஜேப்பியாரின் சொத்துக்களில் மற்ற வாரிசுகளுக்கு என்ன உரிமை வழங்கப்பட்டுள்ளதோ அதேபோல் எனக்கும் வழங்கும்படி கேட்டேன்.
வீட்டு சிறை
அதற்கு போதுமான பதில் தராமல் என் தந்தை முதலாம் ஆண்டு நிறைவு நாள் வரை அமைதியாக இருந்தனர். பின்னர் கடந்த 18ம் தேதி முதல் 22 ம் தேதி வரை என்னை வீட்டிற்குள் கைதியை போல் சிறை வைத்தார்கள். எனக்கு உணவு, மின்சாரம், தண்ணீர், கழிப்பிடம் செல்லவழி இல்லாமல் எல்லாவற்றையும் உள்நோக்கத்துடன் நிறுத்திவிட்டார்கள். பின் என்னை யாரும் சந்திக்க முடியாமல் எல்லாவாசல் கதவுகளையும் மூடிவிட்டார்கள்.
கமிஷனர் நடவடிக்கை
என்னை அடியாட்கள் மூலம் வெளியேற்றிவிட்டார்கள். நான் என் தந்தை சொத்துகளில் எந்த உரிமையும் கோரக்கூடாது என்ற சதிதிட்டத்தை என் குடும்ப நபர்களை எல்லோரும் சேர்ந்து உருவாக்கி என் தாயார் ரெமி மூலம் நிறைவேற்றியுள்ளார்கள். எனவே என்னால் தனியாக அவர்களிடம் போராட முடியவில்லை. எனவே நான் எனது தந்தை வாழ்ந்த இல்லத்தில் தொடர்ந்து வசிக்க போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.