விவேக் மாமனார் வீட்டில் நகைகள்.. ஜெயா டிவி ஜி எம் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்
ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயாடிவி சி.இ.ஓ விவேக் மாமனார் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கிலோ கணக்கில் நகைகளை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஜெயாடிவி பொது மேலாளர் வீட்டில் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், பினாமிகள், நண்பர்கள், கார் டிரைவர்கள், அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
நேற்று அதிகாலை முதல் நடைபெற்ற ரெய்டு 150 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று நீடித்தது. இந்த அதிரடி சோதனையில் பல இடங்களில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள், நகைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயா டிவி பொது மேலாளர் நடராஜன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரை ஜெயாடிவிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விவேக் மாமனார் பாஸ்கர் வீடு அண்ணாநகரில் உள்ளது. இங்கு இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது அங்கு வந்த விவேக்கின் உறவினர் சித்ரா என்ற பெண், தான் பாஸ்கர் வீட்டில் 200 சவரன் தங்க நகைகளை கொடுத்து வைத்திருந்ததாகவும், அதை தனக்கு திருப்பி தரவேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.